ஒரு நாள் பேதுருவும், யோவானும் ஜெபநேரமாகிய பிற்பகல் மூன்றுமணியளவில் ஆலயத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.
KO
Copywork
Tamil OTCV 사도행전 3장
성경필사는 빠르게 끝내는 입력 훈련이 아니라, 한 절씩 말씀의 문장과 흐름을 다시 붙드는 시간입니다. 입력 내용은 이 브라우저에 임시 저장되며, 로그인하면 계정에도 저장됩니다.
소제목 단위로 진행 · 사도행전
அங்கே சிலர், பிறப்பிலேயே முடமான ஒருவனை, அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகிறவர்களிடம் பிச்சை கேட்கும்படி ஒவ்வொரு நாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம்.
பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குள் போவதை அவன் கண்டபோது, அவன் அவர்களிடம் பிச்சை கேட்டான்.
பேதுரு அவனை உற்றுப்பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான்.
அப்பொழுது அவன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து, தனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினான்.
அப்பொழுது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான்.
பின்பு பேதுரு அவனது வலதுகையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பெலமடைந்தன.
அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதற்குப் பின்பு அவன் நடந்தும், துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குப் போனான்.
அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் எல்லா மக்களும் கண்டபோது,
இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசலருகே இருந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவனுக்கு நடந்ததைக்குறித்து அவர்கள் திகைத்து வியப்புற்றார்கள்.
அந்தப் பிச்சைக்காரன் பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், மக்கள் அனைவரும் வியப்படைந்தவர்களாய் சாலொமோனின் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தார்கள்.
இதைப் பேதுரு கண்டபோது, அவன் அவர்களிடம்: “இஸ்ரயேலரே, நீங்கள் ஏன் இதைக்கண்டு அதிசயப்படுகிறீர்கள்? நாங்கள் சொந்த வல்லமையினாலோ, இறை பக்தியினாலோ இந்த மனிதனை நடக்கச் செய்தோமா? இல்லையே; அப்படியிருக்க, ஏன் எங்களை இப்படிப் பார்க்கிறீர்கள்?
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான நமது தந்தையரின் இறைவன், தமது ஊழியரான இயேசுவை மகிமைப்படுத்தினார். நீங்களோ அவரைக் கொலை செய்யும்படி ஒப்புக்கொடுத்தீர்கள். பிலாத்து அவரை விடுதலைசெய்யத் தீர்மானித்தபோதுங்கூட, நீங்கள் அவனுக்கு முன்பாக அவரைப் புறக்கணித்தீர்கள்.
பரிசுத்தரும் நீதிமானுமாகிய அவரை நீங்கள் புறக்கணித்தீர்கள். ஆனால் ஒரு கொலைகாரனை உங்களுக்கு விடுதலை செய்யும்படி நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள்.
ஜீவனின் அதிபதியை நீங்கள் கொலைசெய்தீர்கள். ஆனால் இறைவனோ, இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். நாங்கள் இதற்குச் சாட்சிகளாய் இருக்கிறோம்.
இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் பார்த்து அறிந்த இவன் பெலனடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும் அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே நீங்கள் அனைவரும் காண்கிறபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது.
“சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும் உங்கள் அறியாமையினாலேயே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும்.
ஆனாலும், இறைவன் எல்லா இறைவாக்கினர் மூலமாகவும், முன்னறிவித்ததை இவ்விதமாகவே நிறைவேற்றினார். தமது கிறிஸ்து துன்பங்களை அனுபவிப்பார் என்று அவர் சொல்லியிருந்தாரே.
ஆகவே, மனமாற்றமடைந்து இறைவனிடம் திரும்புங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் கழுவப்படும். கர்த்தரிடத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் உங்களுக்கு வரும்.
இறைவன் உங்களுக்காக ஏற்படுத்திய கிறிஸ்துவாகிய இயேசுவையும் அனுப்புவார்.
இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும்.
ஏனெனில் மோசே, ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார்; அந்த இறைவாக்கினர் சொல்வது எல்லாவற்றையும் நீங்கள் கேட்கவேண்டும்.
அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’ என்று சொல்லியிருக்கிறானே.
“சாமுயேல் தொடங்கி, அவனுக்குப்பின் வந்த எல்லா இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள்.
நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது சந்ததியின் மூலமாக, பூமியிலுள்ள மக்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’ என்று சொன்னாரே.
எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி ஆசீர்வதிக்கும்படி, முதன்முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார் என்றான்.”